Monday, August 27, 2012

ஆடம்பரம் தேவையா குழந்தைகளுக்கு?


நம் குழந்தைகள் நம்மை பெரும்பாலான நேரங்களில் ஆச்சரியப்பட வைப்பார்கள். அவர்களின் கேள்விகள், பதில்கள் எல்லாம் நம்மை ஒரு நிமிடம் யோசிக்க வைப்பவையாகத் தான் இருக்கும். குழந்தைகளை நாம் வளர்க்கும் போது அவர்களை எவ்வாறு வழி நடத்தி கொண்டு செல்கிறோம் என்ற கேள்விகள் பல என் மனதில் உள்ளது. பிறக்கும்போது எல்லா குழந்தைகளும் ஒவ்வொரு வகையில் தலை சிறந்த குழந்தைகளாகத் தான்  இருக்கிறார்கள். குழந்தைகள் தங்களின் தனித் திறமையில் சிறக்கவும் வாழ்கையில் ஒவ்வொரு அடி எடுத்து வைப்பதும் பெற்றோர்களின் துணையுடன் தான் ஒரு குறிப்பிட்ட வயது வரை இருக்கும். அந்த குறுகிய காலகட்டம் தான் அவர்களை வாழ்வினில் நல்வழி படுத்தவும், பிற்காலத்தில் ஒரு நல்ல மனிதனாய் உருவெடுக்க காரணமாய் அமைகிறது.

இதை எல்லாம் தடை செய்வது போல், நம் குழந்தைகளின் வாழ்க்கை முறைகளில் உள்ள சிறு சிறு நெருடல்கள் தான் இந்த பதிவு. நாம் எப்படி நாம் பிள்ளைகளை வழி மாறி அழைத்து செல்கிறோம் என்று பார்ப்போம்.

இந்தப் பதிவில் நான் சொல்லவரும் தலைப்புக்கு செல்வதற்கு முன்பு, சிறிது நேரம் நாம் நம் பால்யகாலத்தை கொஞ்சம் திரும்பி பார்க்கவேண்டி உள்ளது. நீங்களோ, நானோ வளரும் போது எப்படி வளர்ந்தோம் என்று ஒரு நிமிடம் உங்கள் சிறு வயது வாழ்க்கையை நினைத்து பாருங்கள். நாம் குழந்தைகளாய் இருந்த காலகட்டத்தில் ஒரு வருடத்திற்கு நமக்கு எந்தனை உடைகள் கிடைக்கும்? அதிக பட்சமாய் எல்லோருக்கும் கிடைப்பது இரண்டு அல்லது மூன்று உடைகளாகத்தான் இருக்கும். அதுவும் கூட பண்டிகைகளின் போது கிடைக்கும். நாளை தீபாவளி என்றால் இன்று இரவு தான் நம் கையில் உடையும், வெடிகளும் கிடைக்கும். அந்த உடை எடுக்கும் போது கூட பல வீடுகளில் குழந்தைகளுக்கு மட்டுமே கிடைக்கும். அம்மாவும், அப்பாவும் பிள்ளைகளுக்கு மட்டும் எடுத்தால் போதுமே என்று நினைப்பார்கள். இதை எதற்கு சொல்ல வருகிறேன் என்றால், அந்த கடைசி நேரத்தில் கிடைப்பதால் என்னவோ நமக்கு அது பெரிய பொக்கிசமாய் தெரியும் அந்த உடைகளும், வெடிகளும்.

 நம்மை திருவிழாவிற்கு எல்லாம் கூட்டிக்கொண்டு போகும் போது ஆளுக்கு ஒரு பொம்மை என்று வாங்கி கொடுப்பார்கள். அதிலும் வாங்கி கொடுத்தவற்றை அப்பவே உடைத்து விட்டால், கிடைக்கும் அடிகளை இன்றும் நம்மால் மறக்க முடியாது. ஆனால் இன்றைய நிலைமையை யோசித்துப் பாருங்கள். நம் பிள்ளைகள் இன்று எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் வளர்கிறார்கள். இன்றைய பெரும்பாலான குடும்பத்தில் இருப்பது ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் தான். நம் குழந்தைகளுக்கு நாம் சிறு வயதிலே கற்று கொடுத்து கொண்டிருப்பது  ஒரு ஆடம்பரமான வாழ்க்கையைத் தான். நம்மில் பெரும்பாலானவர்கள் ஒரு எளிய வாழ்கை முறையில் இருந்தே வந்திருப்போம். இன்று நம் குழந்தைகளோ அதற்கு நேர்மாறான வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

 பிள்ளைகள் மனதில் நினைக்கும் முன் வாங்கி கொடுக்கும் பெற்றோர்கள் தான் நாம். நம் சிறு வயதில் அப்பாவோ, அம்மாவோ ஒரு பொருள் வங்கி தருவது என்பது திருவிழாகளிலும், பொருட்காட்சியிலும் தான். ஒன்னும் இல்லை ஒரு ஐம்பது பைசாவிற்கு ஒரு பலூன் வாங்க எவ்வளவு நேரம் நாம் பெற்றோர்களிடம் கேட்போம். அந்த பலூனும் வாங்கி நம் கைக்கு வந்தவுடன் உடைந்துவிடும், அதற்கும் நாம் தான் திட்டும் வாங்குவோம். ஆனால் இன்று குழந்தைகள் பலூன் கேட்கும் முன் ஒரு பாக்கெட் பலூன் அவர்களின் கையில் இருக்கிறது. நாம் ஏன் இவ்வளவு தாராளமானவர்களாய் மாறி போனோம்? நமக்கு கிடைக்காதது எல்லாம் நம் பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் என்பது தான் இதற்கு முழு காரணம். ஆனால் இதுவே நம் குழந்தைகளை ஒரு ஆடம்பர வாழ்க்கை வாழ வழிவகுக்கிறது. பொருளாதாரத்தில் ஓர் அளவிற்கு முன்னேறிய குடும்பமும், முன்னேற பாடுபட்டு கொண்டிருக்கும் குடும்பங்கள் தான், இந்த மாதிரி பிள்ளைகளை ஆடம்பர வாழ்க்கைக்கு இழுத்து சென்று கொண்டிருக்கிறோம்.

எப்பொழுதில் இருந்து இந்த ஆடம்பர வாழ்கைக்குள் நாம் நுழைய ஆரம்பித்தோம்? அம்மா, அப்பா இரண்டு பேரும் வேலைக்கு செல்லும் குடும்பத்தில்   வேலை பளு காரணமாய்  தங்களின் குழந்தைகளிடம் அவர்களால் முழுமையாக நேரத்தை செலவிட முடியவில்லை. இதுவே அவர்களுக்கு, தன் மீது குற்றஉணர்வினை கொண்டு வந்து விடுகிறது. இதை சமாளிக்க அவர்கள் குழந்தைகளுக்கு, அவர்கள் கேட்கும் முன் அவர்களின் தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்கிறோம் என்று எல்லா பொருட்களையும் வாங்கி கொடுக்க ஆரம்பிக்கிறார்கள். இதுவே நாளடைவில் அவர்களை ஆடம்பர வாழ்விற்குள் இழுத்து சென்று விடுகிறது. விளையாட்டுப் பொருட்கள் மட்டும் அல்லாமல் அவர்களுக்கு துணிமணிகள், செருப்புகள், அலங்கார பொருட்கள் என்று கண்ணில் படுவதை எல்லாம் வாங்கி தருகிறார்கள். இதை பார்க்கும் மற்ற குடும்பங்களும் நாமும் அப்படி வளர்த்தால் தான் நமக்கு மதிப்பும், பெருமையும் என்று நினைத்து அவர்களும் இந்த ஆடம்பர வாழ்கைக்குள் குழந்தைகளை கொண்டு வந்து விடுகிறார்கள்.

நம்மில் எத்தனை பேர் நம் குழந்தைகளை மாநகரப் பேருந்திலோ, மின்சார ரயிலிலோ கூட்டி சென்று இருப்போம். என்னையும் சேர்த்து பெரும்பாலும் கூட்டி சென்றது இல்லை என்பது தான் உண்மை. ஏனென்றால் நம் பிள்ளை ஒரு சொகுசான வாழ்வை வாழ தான் நமக்கும் பிடிக்கிறது. அதனால் தான் குழந்தைகளை அழைத்து செல்லும் போது ஆட்டோ அல்லது கால் டாக்ஸியில் அழைத்து செல்கிறோம். இந்த மாதிரி ஒவ்வொரு சின்ன விசயங்களிலும் ஆடம்பரமான வாழ்வே நம் பிள்ளைகளுக்கு நல்லது என்று நமக்கு நாமே சமாதானம் செய்து கொள்கிறோம்.

நம் குழந்தைகளை சிறு வயதில் இருந்தே ஆடம்பர வாழ்க்கைக்கு அழைத்து செல்லும் நாம் அவர்களுக்கு ஏமாற்றம் என்று ஒன்று இருப்பதை கற்றுகொடுப்பது இல்லை. ஏமாற்றம் என்றால் என்ன என்று தெரியாத குழந்தைகள் வளரும் போது ஒரு சின்ன ஏமாற்றத்தை கூட தாங்கி கொள்ள முடிவதில்லை.  இது அவர்களை பொறுமை இல்லாதவர்களாகவும், மூர்க்கர்களாகவும், வளரச் செய்கிறது. கேட்டதும் கிடைக்கும் என்று பழகிய குழந்தைகளால், ஒரு பொருள் கிடைக்கவில்லையென்றால் அவர்களை எரிச்சலூட்டுகிறது. இதுவே சில சமயங்களில், அவர்களை பல தவறான முடிவுகளை எடுக்கவும் வைக்கிறது. ஏமாற்றங்களையும் ஏற்று கொள்ளும் மனப்பக்குவத்தை நாம் தான் கொண்டு வரவேண்டும்.

ஒரு பொருளை நாம் வாங்கி கொடுக்கும் முன்பு அவர்களுக்கு அந்த பொருள் தேவையா, அதனால் என்ன பயன் அல்லது கேடு என எடுத்துரைக்க வேண்டும். அந்த பொருளை வாங்க தனது பெற்றோர் தன்னிடம் செலவு செய்யும் நேரத்தை திருடி, வேலை செய்து தான் வாங்குகிறார்கள் என்பதை உணர்த்த வேண்டும். அந்த பொருளுக்கு பெற்றோர்களின் உழைப்பை பற்றியும் எடுத்துரைக்க மறந்து போகிறோம். அதனால் சிறு வயதிலே அவர்களின் மனதில் என்ன கேட்டாலும் நமக்கு அந்த பொருள் கிடைக்கும் என்று அவர்கள் எண்ணி கொள்கிறார்கள்.

குறைந்த விலையில் இருக்கும் பொடருட்களை குழந்தைகள் கேட்டதும் வாங்கிக் கொடுக்கும் நமக்கு, அதிக விலையுள்ள பொருளைக் கேட்கும் போது தான் சிக்கலே. ஒரு காலகட்டத்தில் நண்பர்கள் வைத்திருக்கும் பொருள் தனக்கும் வேண்டும் என்ற எண்ணத்துக்கும் அவர்களை இழுத்து செல்கிறது. அவன் வைத்திருக்கிறான், எனக்கும் அது வேண்டும் என்ற மனநிலையில் தான் நம் குழந்தைகள் வளர்கிறார்கள். இதுவே பிள்ளைகள் பத்தாம் வகுப்பை தாண்டியதும் எனக்கும் என் நண்பனை போல் வண்டி வேண்டும் என்று கேட்க வைக்கிறது.

நாம் நம் குழந்தைகளுக்கு ஒரு பொருளை வாங்கும் முன்பு பலமுறை யோசித்து வாங்கவும் பழகி கொள்ள வேண்டும். நம் பிள்ளைகள் கேட்கும் பொருட்களையும் கேட்டவுடன் வாங்கி தராமல் அவர்களை சிறிது காலமேனும் காக்க வைத்து தேவை என்றால் மட்டுமே வாங்கி கொடுக்க நாமும் பழகி கொள்ளவேண்டும். நம்மில் வரும் இந்த சின்ன சின்ன மாற்றங்கள் நம் குழந்தைகளை நாளை ஒரு நல்ல மனிதனாய் வருவதற்கு கண்டிப்பாய் வழிவகுக்கும். நமது குழந்தை இந்த சமுதாயத்தில் ஒரு நல்ல மனிதனாக வளர்வதும், வளராமல் போவதும் பெற்றோர்களின் இந்த சிறு முயற்சியிலும் அடங்கி இருக்கிறது. நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் நம் பிள்ளைகளும் நம் கையை பிடித்து கொண்டு வந்து கற்று கொள்வார்கள். இன்றே இந்த முயற்சியில் முதல் அடி எடுத்து வைத்து நம் பிள்ளைகளின் சமுதாயத்தை நல்வழி படுத்துவோம்.

குழந்தை வளர்ப்பு பற்றி என் மனதில்பட்ட சில கருத்துகளையும் உதாரணங்களையும் மட்டுமே இந்த பதிவில் எழுதியுள்ளேன். குழந்தைகளுக்கு அன்பும் அரவணைப்பும் தேவை. அதே போல, கண்டிப்பும் கட்டுப்பாடும் தேவை.

புலமை பித்தன் சொன்னது போல,

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே -
பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை (பெற்றோர்) வளர்க்கையிலே!

Saturday, August 11, 2012

மாறிப் போன என் உலகம்.......


கடந்த இரண்டு ஆண்டுகளில் என்னுள் எவ்வளவு மாற்றங்கள். நினைத்து பார்க்கும் பொழுது நானா இவ்வளவு மாறி விட்டேன் என்று மலைப்பாக இருக்கிறது. வேலையை விட்டு இரண்டு வருடங்கள் ஆகப்போகிறது. வேலையை விடும்பொழுது இனி வரும் காலத்தை எப்படிக் கழிக்கப் போகிறோம் என்ற பயமும் சேர்ந்தே வந்தது. திருமணம் ஆன பிறகும் நான் எந்த செயலும் நானே சுயமாக யோசித்து செய்ததில்லை. வீட்டில் இருக்கும் மற்றவர்கள் எடுக்கும் முடிவுகளுடன் பிடித்தோ பிடிக்காமலோ ஒத்துக் கொண்டு ஒரு சராசரியான பெண்ணாகத் தான் இருந்தேன். இப்பொழுது,  ஒன்றும் பெரியதாக மாறிவிடவில்லை. ஆனால் கண்டிப்பாக நான் சில விசயத்தில் மாறி இருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும்.

முன்பெல்லாம் யார் என்ன சொன்னாலும் அவர்கள் மனம் புண்படக்கூடாது என்று, அதை எனக்கு பிடித்ததாக மாற்றிக்கொண்டேன். என்னுள் இருக்கும் என்னை தொலைத்த ஒரு வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டு இருந்தேன். ஆனால் இந்த இரண்டு வருடத்தில் எல்லாம் தலைகீழ். நானே சுயமாக யோசித்து ஆராய்ந்து முடிவு எடுக்கும் அளவிற்கு வந்திருப்பதே ஒரு சின்ன வெற்றியாக நான் பார்க்கிறேன். இதற்கு ஒரு காரணம் நான் தனிமையாக விடப்பட்டதாலோ என்னவோ தெரியவில்லை. பிறந்தது முதல் நான் பெரும்பாலும் தனித்து விடப்படவில்லை என்பதே உண்மை. பெண்ணாக பிறந்ததால் பல விசயங்கள் எனக்கு எட்டாக்கனி தான்.

சிறு வயதில் இருந்தே எனக்கு நிறைய விசயங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் நான் வளர்ந்த சூழ்நிலை, பொருளாதாரம் மற்றும் சுற்றத்தார்கள் என்னை கற்று கொள்ள விடவில்லை. குழந்தையாக இருக்கும் போதே எனக்கு டான்ஸ் ஆடுவது என்பது ரொம்ப பிடித்த விசயம். அதை முறைப்படி கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தது. ஆனால் இதை சொன்ன எனக்கு கிடைத்த பதில், "டான்ஸ் கத்துக்கிட்டு எங்க போய் அரங்கேற்றம் செய்ய போகிறாய்" என்று தான் பதில் வந்தது. இதைத் தவிர, அதை கற்றுக்கொள்ள ஒரு தொகையும் தேவைப் பட்டது, அதை தர முடியாது என்பது என்ற காரணம் எனக்கு கொஞ்சம் விவரம் தெரிந்த பொழுது தான் தெரிந்தது. அன்று முதல் நான் எனக்கு ஆசையான பல விசயத்தை மனதிலே போட்டு புதைக்க ஆரம்பித்தேன். நாளடைவில் எதுவெல்லாம் பொருளாதரத்தை மையமாக வருகிறதோ அது எதுவும் என் பெற்றோர்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டேன். சிறிது நாளில் அதுவும் என் சக தோழிகளின் பெற்றோர்கள் மூலம் என் பெற்றோருக்கு தெரிய ஆரம்பித்தது. என் தந்தை என்னிடம் ஏன் இதை நீ என்னிடம் கேட்கவில்லை என்று கேட்கும் போது நான் சொல்லும் பதில் "உங்களால் முடிந்ததை உங்களிடம் கேட்டு இருக்கிறேன். இதை நான் கேட்டால் கண்டிப்பாக உங்களால் முடியாது" என்று எனக்கு தெரியும். அதனால் தான் கேட்கவில்லை என்றேன். இது அவர்களை பெரிதும் பாதித்தது என்று தான் சொல்ல வேண்டும். இந்த மாதிரி தான் பெரும்பாலான நடுத்தரவர்க்க குடும்பங்களில் நடக்கும். இப்படியே வளர்ந்த நான் எனக்கான என் முதல் முடிவு எடுத்தது நான் மேலே படிக்கவேண்டும் என்று கேட்டதுதான். பெற்றோர்களுக்கோ சுற்றத்தார்களிடம் இருந்து, "அதான் ஒரு பட்டம் வாங்கியாச்சே எதுக்கு மேலே ஏன் படிக்க வைக்கிறாய், பேசாமல் கல்யாணம் பண்ணிக் கொடு" என்று தான் சொன்னார்கள்.

இந்த சந்தர்பத்தில் தான் என் வாழ்வின் முதல் மாற்றம் ஆரம்பம் ஆனது. என் அத்தை மற்றும் அத்தை மகள் இரண்டு பேரும் என் தந்தையிடம் நீங்கள் எவ்வளவு நகை போட்டு கல்யாணம் பண்ணினாலும் நாளை அவள் வாழ்வில் ஏதேனும் பிரச்சனைகள் வந்தால் அவளால் சொந்த காலில் நிற்கும் திறன் இருக்காது. "படிக்க ஆசைபடும் பெண்ணை படிக்கவை" என்று சொன்னார்கள். என் அத்தை என்றால் என் அப்பாவிற்கு ஒரு தனி பிடித்தம் கலந்த பிரியம். அதனால் தான் அவர்கள் கூறியவுடன் மேல் படிப்பு படிக்க எனக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதைப் போல் எடுத்து சொல்ல எல்லோருக்கும் என் போல் அத்தை கிடைப்பார்களா என்று தெரியவில்லை. என் வாழ்விற்கான பாதையில் முதல் மாற்றத்தை காட்டியவர்கள் அவர்கள் இரண்டு பேரும் தான். இந்த தருணத்தில் நான் அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கேன்.

படிக்கும் போது ஏதோ கொஞ்சம் நன்றாக படித்ததால் கல்லூரியில் உதவித்தொகை மூலம் படிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. மாஸ்டர்ஸ் டிகிரியும் வாங்கியாச்சு. அடுத்து என் மனதில் இருந்தது "எப்படியும் ஒரு வேலைக்கு போய் முடிந்த அளவிற்கு பெற்றோர்களுக்கு சம்பாதித்து கொடுக்க வேண்டும்" என்பது தான். பெற்றோர்களுக்கு மறுபடியும் என் திருமணம் ஞாபகம் வந்து நின்றது. இது தான் சரியான சமயம் திருமணம் செய்வதற்கு என்பது அவர்களின் எண்ணமாக இருந்தது. இந்த எண்ணத்தை மாற்ற யார் வருவார்கள் என்று எண்ணி கொண்டிருக்கும் போது எனக்கு அந்த வாய்ப்பும் வாய்த்தது. யாரோ ஒரு புண்ணியவான் ஜோசியர் இந்த பெண்ணிற்கு இன்னும் இரண்டு வருடம் கழித்து தான் திருமணம் நடக்கும் என்று சொல்லிவிட்டார். இதை கேட்ட என் பெற்றோர்கள் அது வரைக்கும் வேண்டுமானால் உள்ளுர் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை பார் என்றார்கள். ஆனால் என் மனதிலோ அந்த எண்ணம் சுத்தமாக இல்லை. எனக்கு படித்த துறையில் வேலைக்கு செல்வதே ஆசையாக இருந்தது. நான் சென்னை சென்று வேலை பார்க்கிறேன் என்று கூறினேன்.

அப்பொழுது இருந்த கால கட்டத்தில் வேலை கிடைப்பது கடினம் தான். என் தந்தையின் நண்பர்களின் பிள்ளைகள் சென்னையில் வேலை கிடைக்காமல் திரும்ப ஊருக்கு வந்த காலம் அது. இவள் போனாலும் இதே நிலைமை தான், இவளே தேடி பார்த்துவிட்டு கிடைக்கவில்லை என்றால், திரும்பிவந்து விடுவாள் என்பதே அவர்களின் மனக் கணக்கு. மூன்று மாதகாலம் எனக்கு அவகாசமாக வழங்கப்பட்டது. அதற்குள் வேலை கிடைக்கவில்லை என்றால் ஊரில் வந்து கல்லூரியில் விரிவுரையாளர் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற நிபந்தனையுடன் சென்னைக்கு அனுப்பப் பட்டேன். சிறு வயதில் இருந்து விடுதிகளில் தங்கி படிக்காத நான் சென்னையில் விடுதிக்கு செல்ல போகிறேன் என்று தான் முதலில் நினைத்தேன். ஆனால் என் பெற்றோர்களோ நீ சென்னை போகலாம், ஆனால் தங்குவது மாமா வீட்டில் தான். விடுதி இல்லை என்று தீர்மானமாக சொல்லி விட்டார்கள். கிடைத்த வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்று அதற்கும் சரி என்று சென்னை சென்றேன்.

அது வரை பெண்கள் பள்ளி, பெண்கள் கல்லூரி என்று சூழ்நிலையில் வளர்ந்த  எனக்கு சென்னை கொஞ்சம் பயத்தை காட்டியது உண்மை தான். என்ன செய்வது எப்படி வேலை தேடுவது என்று குழப்பத்தில் இருந்த எனக்கு மீண்டும் என் அத்தை வழியிலே உதவி கிடைத்தது. இந்த முறை எனக்கு உதவியது என் அத்தையின் இன்னொரு மகள். அவர் தான் எனக்கு எப்படி வேலை தேட வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து என்னை வழி நடத்தி சென்றார்கள். எனக்கான முதல் வேலை அவர் மூலமே கிடைத்தது. இது தான் என் வாழ்விலே ஏற்பட்ட அடுத்த மாற்றம். சென்னை சென்று வேலை தேட எனக்கு என் தந்தை கொடுத்தக் காலக் கெடு மூன்று மாதங்கள். எப்படியும் நான் திரும்பி வந்துவிடுவேன் என்று இருந்த என் பெற்றோருக்கு நான் சென்னை வந்த இரண்டாவது மாதத்தில் வேலை கிடைத்து விட்டது என்றுவுடன் அவர்களுக்கு அதிர்ச்சியாகத் தான் இருந்தது.

இப்படியாக என் சென்னை வாழ்க்கை துவங்கியது. இரண்டு வருடம் சென்ற பிறகு மீண்டும் திருமணம் என்ற பேச்சு ஆரம்பித்தது. இந்த முறை எனக்கு மறுப்பு சொல்லக் காரணங்கள் இல்லை. அதனால் நீங்கள் பார்க்கும் எந்த பையனும் எனக்கு சம்மதம் என்று சொன்னேன். அவர்களின் தேடல் துவங்கியது.

இதன் பிறகு எனக்கு ஏற்பட்ட மாற்றம் தான் என் வாழ்வை தலை கீழாக மாற்றியது. வீட்டில் பார்த்த பையனுடன் என் திருமணம் நடந்தது. இது வரைக்கும் எனக்கு இருந்த பல கட்டுப்பாடுகள் இல்லை. அது வரைக்கும் என்ன சொன்னார்களோ, அதை மட்டும் செய்துக் கொண்டிருந்தேன். எனக்கான முடிவை நானே எடுக்கும் வாய்ப்பும் கிடைத்தது என் திருமணத்திற்கு பிறகு தான். இதை நான் "கற்றுக் கொள்ள ஆசை", என்று சொல்வதற்குள் கற்றுகொள்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கும். எனக்கான என் தேடல் துவங்கியது என்னவோ இங்கு தான்.

கம்யூனிசத்தையும், காரல் மார்க்ஸ்யும் படித்தவனுக்கு பெண் என்பவள் அடிமை இல்லை என்பதை எனக்கு தெளிவுபடுத்தி, உன் பாதையை தேர்ந்தெடுக்க உனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது என்று சொல்லி கொடுத்தான். எனது அடுத்த அடுத்த அடிகளுக்கு நடை பழகும் குழந்தைப் போல எனக்கான பாதையை நான் தேர்ந்தெடுக்க வழிவகுத்தவன் என்னை வாழ்கை துணையாக ஏற்றவன்.

இதுவரை நான் என் வாழ்வு, என் குடும்பம் என்று சுயநலத்துடன் இருந்த நான் இதை தவிர்த்து வெளி உலகையும்  காண ஆரம்பித்து இருக்கிறேன். என் சுயமரியாதையையும் விட்டுக் கொடுக்காமல், நான் நானாக வாழ, ஆரம்பித்து இருக்கிறேன். எனக்கான தேவையும் என் முடிவையும் நானே எடுக்கிறேன். இந்த மாற்றம் எல்லாம் எனக்கே கொஞ்சம் ஆச்சரியம் தான். இந்த மாற்றம் எனக்கு பல தேடலை தேடி தரும் என்று நம்புகிறேன்.  தேடல்கள் தொடரும்....