Wednesday, September 19, 2012

தொடுதல் - அறியாததும்! அறியவேண்டியதும்!!!

நண்பரிடம் உரையாடும் போது, பல வருடங்களுக்கு முன்னால் என் சொந்த ஊரில் நடந்த ஒரு சோகமான நிகழ்வு எனக்கு ஞாபகம் வந்தது. வெளி உலகத்தை இன்னும் அதிகமாக எட்டிப்பார்க்காத ஐந்து வயதே ஆன அந்த பெண் குழந்தையை ஒரு மிருகம் சிதைத்து கொன்ற நிகழ்வு இன்னும் என் மனதில் ஆறா வடுவாய் இருக்கிறது. இந்த மாதிரியான நிகழ்வுகள் நம்மை சுற்றியும் தினந்தோறும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஏன் நம்மில் சில பேர் கூட இந்த மாதிரியான பாலியல் துன்புறுத்தலை கடந்து தான் வந்திருப்போம்.

ஒரு குழந்தையை பெற்று வளர்க்க ஒவ்வொரு பெற்றோர்களும் எவ்வளவு சிரமங்களையும், கஷ்டங்களையும் தாண்டி வருகிறோம். அவ்வாறாக வளர்க்கும் நம் குழந்தைகளை இந்த மாதிரியான நிகழ்வுகளில் இருந்து காப்பாற்ற நாம் சிறு சிறு விசயங்களை நம் குழந்தைகளுக்கு சொல்லி தர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் நண்பர்களே!

குழந்தைகளை பிடிக்காத நபர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். ஒரு குழந்தை பிறந்தது முதல் நாம் அந்த குழந்தையை கொஞ்சுவதற்கு முத்தங்களை தான் கொடுக்கிறோம். நாம் பார்க்கும் எல்லா குழந்தைகளுக்கும் முத்தங்களை பரிசாக வழங்கி, வளரும் அந்த பிஞ்சு மனதில் அவை அன்றாட வாழ்விற்கு தேவை என்பது போல ஆக்கிவிடுகிறோம். யார் முத்தம் கொடுத்தாலும் அந்த குழந்தையும் யதார்த்தமாய் அதை வாங்கி கொள்கிறது. இங்கு தான் பிரச்சனையின் ஆரம்ப கட்டம். குழந்தை தன் பெற்றோர்களை தவிர மற்றவர்களிடம் எப்படி பழக வேண்டும் என்று நாம் சொல்லி தருவதில்லை, அதை பற்றி யாரும் யோசிப்பதும் இல்லை. இதனாலே பாதி பிரச்சனைகள் வருகிறது.

அந்த காலத்தில் இப்படி எல்லாம் இல்லையே என்று கூட நினைக்க தோன்றும். முன்பு நாம் பெரும்பாலும் கூட்டு குடும்பங்களாக  இருந்தோம். நம் குழந்தைகளை நம் பெற்றோர்கள் பார்த்து கொள்வார்கள். நம்மில் பல பேர் நம் பாட்டி, தாத்தாவிடம் தான் வளர்ந்து இருப்போம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் கணவன், மனைவி இரண்டு பேரும் வேலைக்கு செல்பவர்களாக இருக்கிறோம். வேலை நிமித்தமாக  சொந்த ஊரினை விட்டு விட்டு வேறு எங்கோ வாழ்கிறோம். குழந்தைகளை "டேகேர்" அல்லது வீட்டில் தனியாக தான் இருக்கிறார்கள். இதுவே இந்த பிரச்சனைகளுக்கும் காரணமாக  இருக்கிறது. இது தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. இந்த பிரச்சனைகளில் இருந்து நம் குழந்தைகளை நாம் எப்படி காப்பற்றுவது?

நாம், நம் குழந்தைகளை காப்பாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்? முதல் கட்டமாய் நாம் சில முயற்சிகளை எடுக்க வேண்டும். குழந்தை அறியா வயதில் இருக்கும் போதே குழந்தைகளை தூக்கி கொஞ்சுபவர்களிடம் முத்தம் கொடுக்காதீர்கள் என்று சொல்லுங்கள். அப்படி சொல்வதில் தவறொன்றுமில்லை. நாம் குழந்தைகளை காக்க நாம் தான் முதல் அடி எடுத்து வைக்க வேண்டும். இதை சொல்லும் போது நாம் நிறைய எதிர்ப்புகளையும் எதிர்கொள்ள வேண்டிதான் வரும். "இவங்க மட்டும் தான் குழந்தை பெத்து வளர்க்கிறார்களா?", "என்ன அதிசயமாக வளர்க்கிறார்கள் என்று வாய் கூசாமல் பேசத்தான் செய்வார்கள். அதை எல்லாம் பொருட்படுத்த கூடாது.

நம்மில் பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளிடம் பேச, கற்று தர கூச்சப்படும் விசயம் "குட் டச்", "பேட் டச்". குழந்தைகளிடம் அவர்களின் இரண்டரை வயதில் இருந்தே யாரும் முத்தம் கொடுக்க கூடாது. முத்தம் கொடுக்க சொன்னாலோ, முத்தம் கேட்டாலோ தரமாட்டேன் என்று சொல்ல கற்று கொடுங்கள். யாரேனும் முத்தம் கொடுக்க முயன்றால் அம்மாவிடம், அல்லது அப்பாவிடம் சொல்ல வேண்டும் என்று சொல்லி கொடுங்கள். முத்தம் மட்டும் இல்லை, குழந்தைகளிடம் அவர்களின் உடலில் எந்த பாகத்தையும் யாரையும் தொட அனுமதிக்க கூடாது என்பதையும்  சொல்லி கொடுங்கள். அதையும் மீறி யாரேனும் உங்களிடம் தவறாக   நடந்தாலோ அல்லது தவறாக நடக்க முயன்றால் எவ்வாறு அந்த சந்தர்ப்பத்தில் தப்பிக்க வேண்டும் என்பதையும் சொல்லி கொடுங்கள். குழந்தைகளுக்கு நான்கு வயது முதல் தற்காப்பு கலைகளையும் கற்று கொடுங்கள். முடிந்த வரை குழந்தைகளை யாரிடமும் தனியாக  விட்டு செல்லாதீர்கள். பெரும்பாலான குழந்தைகள் பாலியல் தொந்தரவை அனுபவிப்பது தெரிந்த மற்றும் உறவுமுறைகளிடம் தான். உங்களுக்கு நம்பகமான நபர்களை தவிர குழந்தைகளை யாரிடமும் விட்டு செல்லாதீர்கள்.

என் நண்பர் ஒருவரிடம் பேசும் வரை, பெண் குழந்தைகள் தான் அதிகம்  பாதிக்க  படுகிறார்கள் என நினைத்து இருந்தேன். ஆண் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தான் நினைத்து இருந்தேன். அது  எவ்வளவு பெரிய  தவறு என்று பின்பு தான் தெரிந்தது. குழந்தைகளில் ஆண், பெண் என்று பாரபட்சம் இல்லாமல் எப்படி நாம் வளர்க்க வேண்டுமோ அதே போல் தான் இந்த விசயத்திலும் சொல்லித்தர வேண்டும். பெண் குழந்தைகளுக்கு ஒரு விதமான பாதிப்பு என்றால் ஆண் குழந்தைகள் பாதிக்கப்படுவதோ வேறு விதமாக. சிறு வயதில் அவர்கள் எதிர்  கொள்ளும்  இந்த மாதிரியான  பிரச்சனைகளால் அவர்கள் மனதளவில், சிறு வயதில் இருந்தே பாதிக்கபட்டு வளரும்போதே, மற்ற ஆண்கள் மீதோ பெண்கள் மீதோ ஒரு வித வெறுப்பில் வளர்கிறார்கள். இதுவே அவர்கள் வளர்ந்த பிறகு பல தவறுகளுக்கு அடித்தளமாக மாறி விடுகிறது.

இவை அனைத்தையும் மீறி யாதேனும் தவறு நடந்தாலும் நம் குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் ஆதரவும், ஆதரவான வார்த்தைகளும் தான் அவர்களை அவற்றில் இருந்து வெளியில் கொண்டுவர  உதவும். நம்மில் பல பெற்றோர்கள் குழந்தைகளிடம் நண்பராக பழகுவதில்லை. நண்பராக பழகாததால் குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை வெளியில் சொல்ல தயக்கம்  கொள்கிறார்கள். பாலியல் தொந்தரவில் பாதிக்கப்படும் குழந்தைகளை பாலியல் தொந்தரவு கொடுப்பவர்கள் வெளியில் சொல்ல கூடாது என்று மிரட்டுகிறார்கள். இந்த மிரட்டல்களுக்கு பயந்து குழந்தைகளும் இதை வெளியில் சொல்வதில்லை. ஆனால் குழந்தைகளிடம் கண்டிப்பாக ஒரு மாறுதலை நீங்கள் பார்க்கலாம். எப்பொழுதும் ஒரு சோகத்துடன், தனிமையில் இருப்பார்கள்.  இந்த மாதிரி ஏதேனும் மாறுதலை உங்கள் குழந்தைகளிடம் கண்டால் அவர்களிடம் கோவம் கொள்ளாமல் ஒரு நண்பராக அவர்களிடம் என்ன பிரச்சனை என்று கேளுங்கள்.

நாம் ஒரு நண்பராக பழகினால் மட்டுமே குழந்தைகளும் நம்மிடம் தைரியமாகவும், நம்பிக்கையுடனும் அவர்களின் பிரச்சனைகளை சொல்வார்கள். அவர்கள் சொல்லும் போது எந்தவித கோவத்தையும் அவர்களிடம் காட்டாமல், இது ஒன்றும் பெரிய விசயம் இல்லை, நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று அவர்களுக்கு நாம் தான் தைரியம் சொல்ல வேண்டும். அப்பொழுது தான் அவர்களால் இந்த பிரச்சனையில் இருந்தும் வெளியில் வர முடியும்.

இந்த பாதிப்பை பொறுத்தவரை ஆண், பெண் என்று எந்தவித வித்தியாசங்களும் இல்லை. அவர்களை குழந்தைகளாக பார்த்து அவர்களுக்கு இந்த பாதிப்புகளில் இருந்து வெளியில் கொண்டு வருவதும் பெற்றோர்கள் கைகளில் தான் இருக்கிறது. குழந்தைகளை நல்வழிபடுத்துவதற்கும், நாளை இந்த சமூகத்தை அவர்கள் தைரியமாக எதிர் கொள்ளவும் இந்த மாதிரி சிறு சிறு முயற்சிகளை நாம் மேற்கொண்டால் நிச்சயமாக நம் பிள்ளைகள் இந்த உலகத்தை எளிதில் எதிர் கொள்வார்கள்.  முயலுங்கள் இன்றே, நம் பிள்ளைகளுக்காக!!!

மேலும் அறிய:
குட் டச், பேட் டச் - தீபா
குட் டச் - பேட் டச் /Stranger Safety! - சந்தனமுல்லை

8 comments:

  1. தற்காலச் சூழலில் அனைவரும் அவசியம்
    தெரிந்துகொள்ள வேண்டிய தகவலகள் அடங்கிய
    அருமையான பதிவு
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சமூகத்திற்கு,தேவையான பதிவு ,தொடரட்டும்

    ReplyDelete
  3. பெற்றோர்கள் படிக்கவேண்டிய பதிவு....
    குழந்தைகள் சூழ்நிலையை உள் வாங்குபவர்கள்...
    அதனை விலக்க அவர்களுக்கு சொல்லி தருவது மிகவும் அவசியம்.....

    ReplyDelete
  4. அனைவரும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய ஒன்று . ஆம் இருவரும் வேலை பார்க்கும் வீடுகளில் சில நுட்பமான விஷயங்களை நடை முறை படுத்துவதில் சிரமம் உண்டு. ஆனால் அதனுடைய விளைவை அறிந்து முன்னமே செயல் படுவது நல்லது .

    ReplyDelete
  5. பதிவைப் படித்து, மறுமொழி இட்டவர்களுக்கு எனது நன்றி. உங்கள் வார்த்தைகள் என்னை மேலும் எழுத ஊக்குவிக்கின்றது..:-)

    ReplyDelete
  6. great and importent msgs to parents, thanx 4 sharing..

    expecting more..

    ReplyDelete